நீலகிரியில் கனமழை… ரயில் தண்டவாளத்தில் பாறை விழுந்து பயணிகள் அவதி
குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ராட்சத பாறை உருண்டு தண்டவாளத்தில் விழுந்ததால் ஊட்டி மலை ரயில் பாதை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
உதகமண்டலம், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. மழையினால் அணைகளில் நீர் நிரம்பி வழிகளில் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழை பெய்து வரும் நிலையிலும் மழை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலை ரயில், வழக்கம்போல் ஞாயிறு காலை 7.10 மணிக்கு புறப்பட்டது. ரயிலில் 162 பயணிகள் இருந்தனர். மழை பெய்து கொண்டிருந்ததால், முன்எச்சரிக்கையாக குறைவான வேகத்துடன் ரயில் இயக்கப்பட்டது. ஹில்குரோவ் ஸ்டேஷனை கடந்து, அரை கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில், சுமார் 60 அடிக்கு முன்னால் ராட்சத பாறை ஒன்று உருண்டு தண்டவாளத்தில் வந்து விழுந்தது. பாறை விழுந்ததில் 20 அடி நீளத்துக்கு தண்டவாளம் வளைந்தது. பல் சக்கரம், ஸ்லீப்பர் கட்டைகள் நொறுங்கின. அதிர்ச்சி அடைந்த எஞ்சின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். சில நிமிடங்கள் முன்னதாக சென்றிருந்தாலும் மலை ரயில் மீது பாறை விழுந்து விபரீதம் ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
இதுபற்றி குன்னூர் ரயில்நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து கூட்ஸ் வேகனில் ஊழியர்கள் வந்து தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். தண்டவாளம் பலத்த சேதமடைந்ததால் சரி செய்வதில் நீண்ட நேரம் ஆனது.
அடர்வனப்பகுதியில் ரயில் நின்றதால் பஸ்சில் பயணிகளை அனுப்பி வைக்க முடியவில்லை. இது யானைகள் நடமாட்டமுள்ள பகுதியாகும். மழை வேறு பெய்ததால், கீழே இறங்கி கூட நிற்க முடியாமல் பயணிகள் பெட்டிக்குள்ளேயே 3 மணி நேரத்துக்கும் மேலாக முடங்கி கிடந்தனர். ஒரு வழியாக தண்டவாளம் சீரமைக்கப்பட்டு, ரயில் புறப்பட்டது. இதனால் காலை 10.15 மணிக்கு குன்னூர் வரவேண்டிய ரயில், மதியம் 2 மணிக்கு வந்து சேர்ந்தது இதனால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications