’ரா’ நிறுவனர்களில் ஒருவரான பி. ராமன் காலமானார்!

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பற்றி விவாதிக்கும், எழுதுகிற அனைவருமே பி. ராமன் என்ற மூத்த ஆய்வாளரின் கருத்தை அறியாமல் தாண்டிச் சென்றுவிட முடியாது. மத்திய கேபினட் செயலகத்தில் கூடுதல் செயலராகப் பணியாற்றியவர் பி.ராமன். 1968ஆம் ஆண்டு நாட்டின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான ரா வை உருவாக்கியவர்களில் பி.ராமனும் ஒருவர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் Institute for Topical Studies என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் இயக்குநராகப் பணியாற்றினார்.
இணையதளங்களும் சமூக வலைதளமும் தவிர்க்க முடியாத அங்கமாகிப் போக அத்தனையிலும் தமது கருத்துகளை முன்வைத்து வந்தார் பி. ராமன். ramanstrategicanalysis.blogspot.com என்ற வலைப்பூவில் தமது சிந்தனைகளை பதிவு செய்த அவர், தொடர்ந்தும் தம்மைத் தாக்கிய கேன்சர் நோய் பற்றியும் அப்டேட் செய்து வந்தார். கடைசியாக மே14-ந் தேதி தமது வலைப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். எல்லை கடந்த பயங்கரவாதம், சீனாவின் மேலாதிக்கம், தென்னாசிய நாடுகளின் விவகாரங்கள் என வாழ்நாள் முழுவதும் தாம் நேசித்து ஆற்றிய பணி பற்றியே சிந்தித்தவர் அவர்.
இதேபோல் ட்விட்டர் தளத்தையும் முழுமையாக பயன்படுத்தினார் பி.ராமன். கடந்த 29-ந் தேதி ட்விட்டர் பக்கத்தில் தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பதிவிட்ட அவர், 30-ந் தேதியன்று தாம் நலமுடன் வீடு திரும்புவேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் சென்னையில் காலமானார்.
பி. ராமன் மறைந்தாலும் அவர் எழுதிய நூல்களும் கட்டுரைகளும் எப்போதும் நம்முடன் பயணிக்கும்!












Click it and Unblock the Notifications