தஞ்சாவூர் தங்கமுத்துவுக்கு வாரியத் தலைவர் பதவி...இதுவும் நீடிக்குமா?

தஞ்சாவூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சியில் இருக்கிறார். இவர் 5 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 4 முறை தோல்வி அடைந்தார். ஒரே ஒருமுறைதான் வென்றுள்ளார் (திருவோணம் தொகுதி). அந்த அளவுக்கு பதவிக்கும் தங்கமுத்துவுக்கும் ராசி!
2004ஆம் ஆண்டு தஞ்சாவூர் அதிமுக என்றால் தங்கமுத்து என்ற நிலைமை இருந்தது. ஆனால் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த திவாகரன், அதிமுகவின் அடையாளமாக தலையெடுக்க தங்கமுத்துவின் இடம் காணமலே போனது.
இந்த கேப்பில் முன்னுக்கு வந்தவர் அமைச்சர் வைத்திலிங்கம். சமயம் பார்த்துக் காத்திருந்த தங்கமுத்து, சசிகலா குடும்பத்தினர் வெளியேற்றப்பட்ட போது ஒரத்தநாடு பொதுக்கூட்டத்தில் திவாகரனை வெளுத்து வாங்கினார். இதற்கு பரிசாக உடனே கிடைத்தது மாநில விவசாய அணிச் செயலர் பதவி! ஆகா அண்ணனுக்கு யோகம் என்று அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
இந்த நிலையில் ராஜ்யசபா தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர் தங்கமுத்து ஆதரவாளர்கள். ஆனால் முதல் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. பின்னர் திடீரென சரவணபெருமாளை மாற்றிவிட்டு தங்கமுத்து பெயர் அறிவிக்கப்பட்ட போது ஆனந்தமடைந்தனர் அவரது ஆதரவு கோஷ்டியினர்.
இந்த மகிழ்ச்சியும் கூட நீடிக்க முடியாமல் போனதுதான் தங்கமுத்து அணிக்கு ரொம்பவே சோகம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா வேட்பாளர் டி.ராஜாவை அதிமுக ஆதரிக்க முடிவு எடுத்ததுடன் வேட்பாளர் தங்கமுத்து வாபஸ் பெறுவதாகவும் நேற்று அதிமுக தலைமை அறிவித்தது. இதனால் பதவி என்பது எப்போதும் எட்டாமலேயே போய்விடுகிறதோ.. அண்ணனுக்கு பதவி ராசியே இல்லையோ என்று ஏங்கிக் கிடந்த ஆதரவாளர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறது குடிசை மாற்று வாரியத் தலைவர் பதவி.. ஆனால் தங்கமுத்துவுக்கும் பதவிக்கும்தான் எட்டாத ராசியாச்சே என்ற கவலை ஒருபுறம் இருப்பதால் இந்த வாரியத் தலைவர் பதவியும் எத்தனை நாளைக்கோ? என்று பரிதவிக்கின்றனர் தங்கமுத்து ஆதரவு வட்டாரம்.












Click it and Unblock the Notifications