டெல்லியில் இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு.. பிரதமருடன் ஆலோசனை!
டெல்லி: டெல்லி வந்துள்ள இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது இலங்கை அரசு மீது மன்மோகன்சிங் அதிருப்தியை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு கடந்த 16-ந் தேதி இந்தியாவுக்கு வந்தது. இரா.சம்பந்தன் தலைமையிலான இக்குழுவில் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகிய எம்.பி.க்கள் இடம்பெற்றிருந்தனர்.
இக்குழு நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்தித்துப் பேசினர். பின்னர் பிரதமா மன்மோகன்சிங்கை சந்தித்தனர்.
அப்போது தமிழர் பகுதிகளில் ஒன்றான வட மாகாணசபைக்கு செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழலில் ஒட்டுமொத்தமாகவே மாகாணசபைகளின் அதிகாரத்தை நீர்த்துப்போக செய்ய இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட 13-வது அரசியல் சட்ட திருத்தத்தில் மாற்றம் செய்கிறது இலங்கை அரசு என்று தமிழ் எம்.பி.க்கள் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை அரசின் இந்த செயல் கவலைக்குரியது. தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதாக இந்தியாவுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை அரசு அளித்த வாக்குறுதி மீது இதனால் சந்தேகம் ஏற்படுத்துகிறது. இலங்கை அரசானது மாகாணங்களுக்கான அதிகார பகிர்வு அடிப்படையில் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications