உணவு, கழிப்பிட வசதியுடன் 'கிளாசிக் பேருந்துகள்': ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
சென்னை: உணவு, கழிப்பிட வசதியுடன் கூடிய இரண்டு கிளாசிக் பேருந்துகளை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நாளொன்றுக்கு 2 கோடியே 10 லட்சம் பயணிகள் பயணிக்கின்ற அளவில் 20,507 தடப் பேருந்துகளை இயக்கி வருகின்றன. பொதுமக்களின் தேவைகளுக்கேற்ப, தமிழக அரசு தொடர்ந்து புதிய பேருந்துகள் மற்றும் புதிய வழித்தடங்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், 189 புதிய பேருந்துகள் மற்றும் 55 புனரமைக்கப்பட்ட பேருந்துகள், என மொத்தம் 244 பேருந்துகளை முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கிளாசிக் பேருந்து
இன்று தொடங்கி வைக்கப்பட்ட பேருந்துகளில், ஸ்ரீரங்கம் - சென்னை மற்றும் சென்னை - ஸ்ரீரங்கம் வழித்தடத்தில் விமானம் மற்றும் ரயில் வண்டிகளில் உள்ளது போன்ற உணவு பரிமாறுதல் மற்றும் கழிப்பிட வசதியுடன் கூடிய இரண்டு புனரமைக்கப்பட்ட பேருந்துகளும் அடங்கும்.
இந்த பேருந்து ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னைக்கு காலை 9 மணிக்கும், இரவு 10 மணிக்கும் ஸ்ரீரங்கத்தில் இருந்து இரண்டு பேருந்துகள் புறப்படுகிறது. இதேபோல் சென்னையில் இருந்து காலை 9 மணிக்கும், இரவு 10 மணிக்கும் ஸ்ரீரங்கத்துக்கு இரண்டு பேருந்துகள் புறப்படுகிறது.

இட்லி, பொங்கல், ஊத்தப்பம்
இந்த பேருந்தில் காலை நேரத்தில் இட்லி, பொங்கல், ஊத்தப்பம் கிடைக்கும். 3 இட்லி 15 ரூபாய். பொங்கல், ஊத்தப்பம் ரூ.15க்கு கிடைக்கும். மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் ரூ.20க்கு வழங்கப்படுகிறது. இரவு நேரத்திலும் உணவு வகைகள் உண்டு.
தவிர 50 கிராம் மிக்சர் ரூ.5க்கும், பிஸ்கட் பாக்கெட் ரூ.5க்கும் கிடைக்கும். டீ, காபி ரூ.5க்கும் வழங்கப்படுகிறது. இந்த கிளாசிக் பேருந்தில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் 10 ரூபாய்தான். ரயிலில் ஒரு லிட்டர் குடிநீர் ரூ.15க்கும் விற்கப்படுகிறது. பேருந்து இருக்கைகளும் சொகுசாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் உணவு மற்றும் கழிப்பிட வசதியுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை. இந்த வசதிகள் இனிமேல் மற்ற பேருந்துகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications