தனித்துப் போட்டியிட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும்: தங்கபாலு

சேலத்தில் நடந்த காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து சொந்தப் பலத்தில் போட்டியிட்டதாலேயே இப்போது ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது.
அதேபோல, தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டால், எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும்.
தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லை. கோஷ்டியே இருக்கக் கூடாது. எந்தக் கட்சியில் கோஷ்டி பூசல் இல்லை. அரசியல் கட்சி என்றால் அதில், கோஷ்டி பூசல் தவிர்க்க முடியாதது. தமிழகத்தில், காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். தலைமை உத்தரவுபடி, அவரவர் அந்தந்த மாவட்டங்களில் கட்சிப் பணிசெய்து வருகின்றனர் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கட்சியை பலப்படுத்த மாவட்ட, மாநகர, வட்டம், மற்றும் கிராம அளவில் கூட்டம் நடத்தவும், உறுப்பினர் சேர்க்கை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ராஜ்யசபா தேர்தல் குறித்து தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்களின் கருத்தை கட்சி மேலிடம் கேட்டது. அகில இந்திய தலைமை இது குறித்து முடிவு அறிவிக்கும்.
ராஜ்யசபா தேர்தலில் அமையும் கூட்டணியே நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி என்று கருதக்கூடாது. கூட்டணி என்பது தேர்தலுக்கு தேர்தல் மாறும். கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் சிறப்பான ஆட்சி செய்து வருகிறது. இதை மக்கள் இடத்தில் சொல்லி ஓட்டு கேட்போம்.
ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. நீதிமன்றத்தில் நிரூபணம் ஆனால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்.
தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி புதிய வேகத்தில் செயல்பட்டு வருகிறது. அதிமுக, திமுகவுக்கு அடுத்த முதன்மையான கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது. அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிப்போம். தமிழக உரிமையை பெற்று கொடுப்பதில் சளைத்தவர்கள் அல்ல தமிழக காங்கிரசார் என்றார்.












Click it and Unblock the Notifications