உத்தரகாண்ட்- மழை லேசாக நின்றது.. மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள்
டேராடூன்: மோசமான வானிலை சீரடைந்த காரணத்தால், உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப் பாதிப்பில் சிக்கித் தவிக்கும் மக்களை ஹெலிகாப்டர் மீட்கும் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து 22,000 பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் சிக்கித் தவித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுவரை உத்தரகாண்ட் மாநிலத்தில் 557 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் மழை
கேதார்நாத், பத்ரிநாத், டேராடூன், ரிஷிகேஷ் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால் ஹெலிகாப்டர் சேவையை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

25ம் தேதி முதல் கன மழை
இந்த நிலையில் 25ம் தேதி முதல் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் அங்கு சிக்கித் தவிப்போர் பெரும் பீதியில் மூழ்கியுள்ளனர். அதற்குள் தாங்கள் உயிர் தப்பி விட வேண்டுமே என்ற பெரும் பதட்டத்தில் உள்ளனர்.

சட்டி வனப்பகுதியில் 500 பேர் தவிப்பு
மிகவும் அபாயகரமான வனப்பகுதி என்று கூறப்படும் சட்டி வனப்பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்து வருகின்றனராம். இவர்களை மீட்பதில்தான் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பத்ரிநாத்தில் 8000 பேர்
பத்ரிநாத்தில் தற்போது 8000 பேர் சிக்கியுள்ளனர். பிதோகார் பகுதியில் 1000 பேரும், ஹேம்குந்த் சாஹிப் பகுதியில் 100 பேரும் சிக்கியுள்ளனர். பர்கோட்டிலிருந்து 900 பேர் இன்று மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேதார்நாத்தில் 123 உடல்கள் மீட்பு
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேதார்நாத் பகுதியில்தான் அதிக அளவிலானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அங்கு 123 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 300 பேர் தொடர்ந்து அங்கு சிக்கித் தவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications