கல்யாண வீடு துக்க வீடான சோகம் : புது மாப்பிள்ளையை அடித்துக் கொன்ற தந்தை தலைமறைவு
சீர்காழி: சீர்காழியில், இன்று திருமணம் நடை பெற இருந்த சூழ்நிலையில், நேற்று குடித்து விட்டு வந்த கோபத்தில் மணமகனான மகனை அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் நத்தம் வடக்கு தெருவை சேர்ந்தவரான சங்கரன், சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த இவர் நான்கு மாதங்களுக்கு முன்பு தான் சொந்த ஊர் திரும்பினார். சங்கரனின் மகனான சுரேஷ் குமாரும் அப்பாவுடன் சவுதி அரேபியாவில் தான் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார் சுரேஷ். நேற்று மதியம் நிச்சயதார்த்தமும், இன்று திருமணமும் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நன்கு குடித்து விட்டு வந்துள்ளார் சுரேஷ். இதனை சங்கரன் கண்டித்துள்ளார்.
வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. ஆத்திரத்தில் சங்கரன் அருகில் கிடந்த மண்வெட்டியால் மகனைத் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனை தொடர்ந்து, சுரேஷின் தாயார் பூங்கோதை அளித்த புகாரின் பேரில், வைத்தீஸ்வரன் கோவில் இன்ஸ்பெக்டர் அப்துல் கபூர், சப்-இன்ஸ்பெக்டர் கலைமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், அதற்குள் சங்கரன் தலைமறைவாகிவிட்டார்.
பின்னர், சம்பவ இடத்திலிருந்த சுரேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான சங்கரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications