ராஜ்யசபா தேர்தல்..வியூகம் வகுக்க தெரியாமல் ’மொக்க’பட்டுப் போன தேமுதிக!
சென்னை: ராஜ்யசபா தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது.. இத்தேர்தலில் 6வது எம்.பி. இடத்துக்குப் போட்டியிடும் திமுக- தேமுதிகவில் திமுகவின் வெற்றி உறுதியாகி உள்ளது. தேமுதிக தமது எதிர்க்கட்சி ஆளுமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வியூகம் வகுக்கத் தெரியாமல் கேவலப்பட்டு நிற்கிறது என்பதே உண்மை.
தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவடைவதால் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 151 எம்.எல்.ஏக்களைக் கொண்ட அதிமுகவுக்கு 4 எம்.பி.க்கள் கிடைப்பது உறுதி. எஞ்சிய 2 இடங்களை அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து திட்டமிட்டிருந்தால் எளிதாக பெற்றிருக்க முடியும்.

திராணி இல்லாமல் போனது கேவலம்தான்:
தமிழக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி என்று சொல்லிக் கொள்கிற, இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியுடன் நேசக்கரம் நீட்டக் கூடிய கட்சி என்று சொல்லிக் கொள்கிற தேமுதிகவால் இதைச் செய்ய திராணி இல்லாமல் போனது கேவலம்தான்.
சரி திமுக- இடதுசாரிகள்- காங்கிரஸை ஓரணியில் இணைக்க முடியாது என்றே வைத்துக் கொள்ளலாம்.. அடுத்தடுத்த வாய்ப்புகளைக் கூடவா தேதிமுக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இப்படி மொக்கப் பட்டு நிற்பது?

தேமுதிக- இ.கம்யூ-மார்க்சிஸ்ட்:
ராஜ்யசபா தேர்தலில் அதிமுக தலைமை அதிரடியாக 5 வேட்பாளர்களை அறிவித்தது. இதனால் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தனித்துவிடப்பட்டிருந்தன. 22 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் தேமுதிக என்ன செய்திருக்கலாம்? 10 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட், 8 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேசி அணி அமைத்திருக்க வேண்டும்.

ஒன்னும் நடக்கவில்லை...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உட்கட்சி குழப்பம் உருவாகி இருந்தது. அந்த நேரத்தில் தேமுதிக வலிய சென்று ஆதரவு கொடுத்து டி.ராஜாவை நீங்கள் நிறுத்துங்கள்.. எங்களது 22 எம்.எல்.ஏக்களும் மார்க்சிஸ்ட் கட்சியின் 10 எம்.எல்.ஏக்களும் இருக்க ஏன் பயம் என தைரியமான வியூகம் வகுத்திருந்தால் தேசிய அளவில் தேமுதிக திரும்பிப் பார்க்கக் கூடிய கட்சியாக உருவெடுத்திருக்கும்.. ஒன்னும் நடக்கவில்லை...

வேட்பாளரை அறிவிக்காமல் இருந்திருக்கலாம்:
திமுகவுடனான பேரம்தான் படியவில்லை.. இந்திய கம்யூனிஸ்ட்- மார்க்சிஸ்ட் கட்சியை உள்ளடக்கிய கூட்டணியை உருவாக்க முடியவில்லை.. பிறகு என்ன தைரியத்தில் வேட்பாளர்களை தேமுதிக நிறுத்தியதாம்? 10% வாக்குகளைக் கொண்ட அல்லது எப்போது வேண்டுமானாலும் கூட்டணியில் இருந்து கழன்று கொள்ளக் கூடிய தேமுதிகவை காங்கிரஸ் நம்புமா? தேமுதிகவைவிட கூடுதல் வாக்கு சதவீதம் கொண்ட அல்லது எத்தனை நெருக்கடி வந்தாலும் கூடுமானவரை கூட்டணியை தாங்கக் கூடிய திமுகவை காங்கிரஸ் நம்புமா? என்று ஒருமுறைக்கு 10 முறை தேமுதிக சிந்தித்திருக்க வேண்டும்.. எவர் கொடுத்த தையரித்தில் வேட்பாளரை தேமுதிக நிறுத்தியதோ தெரியவில்லை.. இப்போது தோல்வியைத் தழுவ வேண்டிய நிலை...

பிழை பண்ருட்டியார் மீதா?
தேமுதிகவைப் பொறுத்தவரை அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்தான் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த்துக்கு ஆலோசகர். பண்ருட்டியாரின் ஆலோசனையின் பேரில் இத்தகைய கேவலமான வியூகத்தை விஜயகாந்த் வகுத்தார் எனில் பண்ருட்டி ராமச்சந்திரனை கழட்டிவிட இதைவிட அற்புதமான வாய்ப்பு தேமுதிகவுக்கு இல்லை..

அல்லது மச்சான் சுதீஷ் வழிகாட்டுதலா?
பண்ருட்டியார் சொல்லியா கேட்பார் விஜயகாந்த்... "முதுபெரும்" அரசியல்வாதியான மச்சான் சுதீஷ் வழிகாட்டுதலின் பேரில்தான் இத்தகைய களேபர வியூகங்களுக்கு வகுத்தார் எனில் "சூப்பரோ! சூப்பர்! நீங்க ரொம்ப நல்லா வருவீங்க" என்று வாழ்க கோஷமிட்டுக் கொள்ள வேண்டும் தேமுதிக தொண்டர்கள்..












Click it and Unblock the Notifications