பரிதி இளம்வழுதி அதிமுகவுக்கு சென்றதால் இழப்பு இல்லை: திமுக
சென்னை: பரிதி இளம்வழுதி அதிமுகவில் இணைந்ததால் திமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை என்று முன்னாள் சென்னை மேயரும், தி.மு.க. இளைஞர் அணி பொது செயலாளருமான மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னையில் பரிதியின் இடத்தை பிடித்தவர் சுப்பிரமணியன். இவரது எழுச்சியாலும் அவருக்கு ஸ்டாலினுடன் ஏற்பட்ட நெருக்கத்தாலும் தான் பரிதி தனது செல்வாக்கை இழந்தார்.
இந் நிலையில் சுப்பிரமணியன் கூறுகையில், பரிதி இளம் வழுதி தி.மு.கவில் இருந்தவரை கட்சி அவருக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவரது தந்தை தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்தார். அவரை தொடர்ந்து பரிதி இளம் வழுதிக்கும் கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.
7 முறை எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. 6 முறை எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றார். தி.மு.க. அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். கட்சியில் துணை பொது செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பராக இருந்தார். தலைவர் கருணாநிதியால் மிகவும் பாராட்டப்பட்டவர்.
2011க்கு பிறகு அவர் தி.மு.கவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இப்போது அவருக்கு போதாத நேரம். அரசியல் புகலிடம் தேடி சென்றுள்ளார்.
அவர் ஒருவர் விலகி சென்றதால் மாபெரும் இயக்கமான தி.மு.கவுக்கு எந்த இழப்பும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications