என்.எல்.சி. பங்கு: தமிழக அரசின் கோரிக்கை…. மத்திய அரசு 'செபி'க்கு பரிந்துரை!
டெல்லி: என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கு விற்கலாம் என்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கை குறித்து 'செபி' க்கு பரிந்துரை செய்துள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி மின் உற்பத்தி நிறுவனமான என்.எல்.சி. யின் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்து, அமைச்சரவையிலும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் என்.எல்.சி. பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா, என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களிடமே விற்கலாம் என்றும், அதனை தனியார் நிறுவனத்திடம் விற்க கூடாது என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கு விற்கலாம் என்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கை குறித்து 'செபி' க்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், அவ்வாறு விற்க முடியுமா என 'செபி'யின் கருத்தை கேட்டுள்ளதாகவும் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கை கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். அவர் பிரதமருக்கு அந்த கடிதத்தினை எழுதியுள்ளார். எனினும் என்.எல்.சி பங்குகளை தமிழகத்திற்கு கேட்டுள்ளதாக செய்தித்தாள்கள் வாயிலாக அறிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். எனவே முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கைகளை மத்திய அரசு கவனமுடன் பரிசீலித்து வருவதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications