விவசாயத்தில் தொடர் நஷ்டம்; நிவாரணமும் கிடைக்காததால் விவசாயி மருந்து குடித்து தற்கொலை
அரியலூர்: அரியலூரில், விவசாயத்தில் ஏற்பட்ட தொடர் நஷ்டம், அரசின் நிவாரண உதவியும் கிடைக்காததால், மனமுடைந்த விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், தாப்பழூர் ஒன்றியம், ஆலவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்குட்டுவன். இவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்காக மின் இணைப்பு கேட்டு, 15 வருடத்திற்கு முன்பு மின்வாரிய அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் விவசாயத்திற்காக கடந்த 2001ல் பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு டெல்டா பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.
கடந்த 2006ஆம் ஆண்டு மின் இணைப்பு கிடைத்து விடும் என்ற எண்ணத்தில் 4.5 லட்சம் ரூபாய் செலவு செய்து போர்வெல் போட்டு மோட்டார் பம்பும் அமைத்துள்ளார். ஆனால், 2009 வரை மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் சாகுபடி செய்த பயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், புதியதாக ரூ.1.5 லட்சம் செலவில் ஜெனரேட்டர் வாங்கி விவசாயம் செய்துள்ளார்.
தற்போது, மின்சாரப் பிரச்னையாலும், நிலத்தடி நீர்மட்டம் கீழே போனது. கடுமையான வறட்சியின் காரணமாகவும், சரியான நேரத்தில் தண்ணீர் பாய்க்க முடியாமல் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு ரூ.9 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
மின்சாரம் இல்லாத காரணத்தினால், தண்ணீர் இறைக்காமல், போட்டு வைத்திருந்த மோட்டார் பம்பும் பழுதடைந்து விட்டது. இப்படி பல விதத்திலும், பல நஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்.
இந்நிலையில், கடன்பிரச்சினை தலை தூக்கவே, வீட்டிலும் பல பிரச்னைகள் ஏற்பட்டது. அரசு அறிவித்த நிவாரணத் தொகை கிடைத்தால்கூட தனது கடனை சரி செய்து கொள்ளலாம் என செங்குட்டுவன் மனதை தேற்றி வந்தார். ஆனால், நிவாரண பணமும் இவருக்கு கிடைக்கவில்லை.
இதனால், மனமுடைந்த செங்குட்டுவன், நேற்று மாலை, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி ஊர் முழுக்க பரவியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications