தமிழகத்தில்தான் கொலையை கலையாக செய்கிறார்கள் - ராம கோபாலன் காட்டம்

வேலூரில் மாநில இந்து முன்னணி செயலாளர் வெள்ளையப்பன் மிகவும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று கடையடைப்பு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், வெள்ளையப்பன் உடலுக்கு நேற்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம. கோபாலன், பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் வெள்ளையப்பனின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராம கோபாலன், தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. முன்கூட்டியே நாங்கள் தகவல் தெரிவித்தாலும் புலனாய்வு துறை தக்க நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. அதனை தமிழக அரசு கண்டும் காணாமல் இருப்பது அவர்களுடைய தோல்வி.
தமிழகத்தில் மட்டும்தான் கொலையை கலையாக செய்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகம் கொலை நகரமாக மாறிக் கொண்டு இருப்பது வேதனைக்குறியது.
கொலைக்கான குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் யாரையோ ஒருவரை குற்றவாளி என்று காண்பிக்கும் செயல் இங்குதான் நடக்கிறது. இந்த கொலைக்கு யார் காரணம் என்று கூறி நாங்கள் காவல்துறையை திசை திருப்ப விரும்பவில்லை. இந்த கொலைக்கான உண்மையான குற்றவாளியை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications