குரான் மீது பதவிப்பிரமாணம்.. ஆஸி.யின் முதல் முஸ்லீம் அமைச்சரை விமர்சித்த இனவெறியர்கள்
மெல்போர்ன்: திருக்குரான் மீது கை வைத்து பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ஆஸ்திரேலியாவி்ன் முதல் இஸ்லாமிய அமைச்சரை கடுமையாக விமர்சித்து, இனவெறியர்கள் டிவிட்டர், பேஸ்புக்கில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இனவெறிக்குப் பெயர் போனது ஆஸ்திரேலியா. அங்கு தோலைப் பார்த்து ஆளைப் பார்க்கும் கூட்டம்தான் அதிகம்.
இந்தியர்கள் இந்த ஆஸ்திரேலியர்களிடம் சிக்கி பட்ட பாடு உலகுக்கே தெரியும். இப்படிப்பட்ட இனவெறி பிடித்த ஆஸ்திரேலியாவில், அந்த நாட்டு அமைச்சர் ஒருவரே இனவெறி விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.

முதல் இஸ்லாமிய அமைச்சர் எட் ஹூசிக்
43 வயதான எட் ஹூசிக் அந்த நாட்டின் ஒலிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இஸ்லாமியர் ஆவார். மேலும் ஆஸ்திரேலியாவின் முதல் இஸ்லாமிய அமைச்சரும் கூட.

போஸ்னியர்
இவரது பெற்றோர் போஸ்னியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இடம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர்.

குரான் மீது பதவிப்பிரமாணம்
இவர் திங்கள்கிழமையன்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அப்போது திருக்குரான் மீது கை வைத்தப்படி பொறுப்பேற்றார்.

குரான் இல்லாமல் எப்படி பதவியேற்பது
இதுகுறித்து ஹூசிக் கூறுகையில், நான் ஒரு முஸ்லீம். எனது நம்பிக்கையை நான் வெளிப்படுத்தினேன். என்னால் பைபிள் மீது கை வைத்து உறுதி ஏற்க முடியாது. நான் யாரோ அதுவாகவே இருக்க விரும்புகிறேன் என்று கூறினார் ஹூசிக்.

இனவெறி விமர்சனங்கள்
இதையடுத்து ஹூசிக்கை மிகக் கடுமையாகவும், இனவெறியுடனும் திட்டி ஆன்லைனில் சிலர் கிளம்பி விட்டனர்.

பேஸ்புக்கில் காட்டமான கருத்துக்கள்
ஹூசிக்கின் பேஸ்புக்கில் பல இனவெறியர்கள் புகுந்து இது அவமானமாக இருக்கிறது. நீங்கள் முழுமையான ஆஸ்திரேலியர் அல்ல என்றும் இன்ன பிற இனவெறிக் கருத்துக்களைச் சொல்லியும் விமர்சித்தபடி உள்ளனர்.

பிரதமர் கெவின் ரூட் வருத்தம்
ஹூசிக் மீதான இனவெறி தாக்குதல் குறித்து பிரதமர் கெவின் ரூட் வருத்தம் தெரிவித்துள்ளார். ஹூசிக்கின் பெற்றோருக்கு அவர் போன் செய்து தனது வருத்தத்தையும் பதிவு செய்தார்.












Click it and Unblock the Notifications