ராமஜெயத்தைக் கொன்றது அவருக்கு நெருக்கமானவரா?.. டென்ஷனில் திமுக!

முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேருவின் தம்பியும், பிரபல தொழில் அதிபருமான ராமஜெயம் (40). தில்லைநகர் 10 வது கிராசில் வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு மார்ச், மாதம் 29 ம் தேதி அன்று காலை கே.என்.ராமஜெயம் வாக்கிங் சென்ற போது மர்ம நபர்களால் காரில் கடத்தி படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவரது பிணம் ஸ்ரீரங்கம் அருகே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி லதா தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, கே.என்.ராமஜெயம் கொலையாளிகளை தேடி வந்தனர். இன்னும் தேடி வருகின்றனர்.
ராமஜெயம் படுகொலை சம்பவம் தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் ராமஜெயம் சம்பந்தப்பட்ட பலரிடம், பிரபல ரவுடிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் குற்றவாளி குறித்த தகவலோ அல்லது அதற்கான தடத்தையோ போலீசார் நெருங்க முடியவில்லை. இதனால் தமிழக போலீஸ் மீது செயல்பாட்டில் நம்பிக்கையின்மை ஏற்பட்டது.
இந்த நிலையில், திருச்சி வந்த போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் , ராமஜெயம் கொலை வழக்கை, திருச்சி நகர கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் அமல்ராஜ் வசம் ஒப்படைத்தார்.
அமல்ராஜ், கடந்த வாரத்தில் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க புதிய தனிப்படை அமைத்தார். அந்த தனிப்படை கெடுத்த தகவலின் பேரில் ராமஜெயம் கொலை வழக்கு சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
அதில், ராமஜெயத்துக்கு மிக நெருக்கமான நபர்களில் ஒருவர் தான் அவரைக் கூலிப் படையை ஏவி கொலை செய்துள்ளார் என்ற உறுதியான தகவல் கிடைத்துள்ளதாம்.
அந்த கொலையில், திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாம். மேலும், இது ஒரு ஆதாயக் கொலை என்றும் போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கொலை தொடர்பான முழு விவரங்களையும் போலீஸார் ஆதாரப்பூர்வமாக சேகரித்து வருவதாகவும், விரைவில் வெளியிடலாம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.
ராமஜெயம் கொலை வழக்கு விவரங்கள் திமுகவுக்கு நெருக்கடி தரும் வகையில் இருக்கும் என்றும் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications