தமுமுக தடையை மீறி போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது… போக்குவரத்து பாதிப்பு
சென்னை: சென்னையில் போலீசார் விதித்த தடையை மீறி பேரணியாக செல்ல முயன்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இடஒதுக்கீடு உள்பட மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முடிவு செய்திருந்தது. இந்த பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று அனுமதி மறுத்திருந்தது.
இந்த நிலையில், தடையை மீறி தமுமுக தொண்டர்கள் எழும்பூரில் கூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமுமுகவினரின் இந்த பேரணியால் சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆயிரக்கணக்கான தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் 50 பேருந்துகளில் அவர்கள் ஏற்றப்பட்டனர்.
கருணாநிதி கண்டனம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பேரணிக்கு காவல்துறை தடை விதித்ததற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைமையில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெருமக்கள், தங்களின் முப்பெரும் கோரிக்கைகள் வெற்றி பெற ஆவன செய்ய வேண்டுமென்று அரசைக் கேட்டுக் கொள்வதற்காக, இன்றைய தினம் சென்னையில் தலைமைச் செயலகத்தை நோக்கி அமைதிப் பேரணி ஒன்றினை நடத்துவதற்குக் கூட அரசு அனுமதி மறுத்துள்ளது.
அ.தி.மு.க. அரசு அண்மைக் காலங்களில் மக்களுக்குரிய சாதாரண அடிப்படை உரிமைகளைக் கூடப் பறிக்கின்ற வகையில் பேரணி நடத்தத் தடை, பொதுக்கூட்டம் நடத்தத்தடை என்றெல்லாம் கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதை தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications