அதிமுக கூட்டத்தில் அமைச்சர் தாமோதரன் முன்பு கட்சியினர் அடிதடி
கோவை: வால்பாறையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் தாமோதரன் முன்பு கட்சியினர் அடிதடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக செயற்குழு கூட்டம் துளசியம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. தொகுதி செயலாளர் அமீது, நகர செயலாளர் மயில்கணேஷ் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் கோவை மாவட்ட செயலாளரும், வேளாண்துறை அமைச்சருமான தாமோதரன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது,
லோக்சபா தேர்தலில் அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நம் கட்சியைப் பொறுத்தவரை யார் என்ன தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தயங்கவே மாட்டார். எனவே கட்சியின் கட்டுப்பாட்டை உணர்ந்து லோக்சபா தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும்.
வேற்றுமைகளை மறந்து செயல்பட்டால் பொறுப்புகள் தானாக தேடி வரும். எனவே, கட்சி நிர்வாகிகள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செய்லபட வேண்டும் என்றார்.
அப்போது கருமலை கிளை செயலாளர் மயில்வாகனன் உள்ளிட்ட பலர் திடீர் என்று தாமோதரனை முற்றுகையிட்டனர். வால்பாறை நிர்வாகிகள் சிலர் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்து வருவதாக அவர்கள் கூச்சலிட்டனர். மேலும் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதனால் பரபரப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அப்பபோது கருமலையைச் சேர்ந்த தொண்டர் மூக்கன் என்பவருக்கு அடி, உதை விழுந்தது. இதை பார்த்த தாமோதரன் கட்சியினரை சமாதானம் செய்துவிட்டு காரில் ஏறி அங்கிருந்து சென்றார்.












Click it and Unblock the Notifications