நிலக்கரி சுரங்க வழக்கு: அரசிடம் விசாரணையை பகிர்ந்து கொள்ள அனுமதி கோரும் சிபிஐ!

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் கடந்த 5-ந் தேதி வரையிலான விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் வைத்து சிபிஐ இன்று தாக்கல் செய்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கின் விசாரணை விவரங்கள் அரசிடம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்று அந்த அறிக்கையில் சிபிஐ உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் விசாரணைக்கான சில அனுமதிகளைப் பெற வேண்டிய நிலையில் மத்திய அரசிடம் தகவல் பரிமாற வேண்டியிருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னாள் நிலக்கரி துறை செயலர் குப்தாவிடம் அண்மையில் விசாரணை நடத்த கம்பெனிகள் விவகார அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டதாகவும் ஆனால் உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால் அனுமதி கிடைக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனிகுமார் திருத்தினார் என்பதால்தான் கெடுபிடிகளைக் காட்டி சிபிஐக்கு கடிவாளம் போட்டு வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ இன்று தாக்கல் செய்திருக்கும் அறிக்கை மீது புதன்கிழமை விசாரணை நடைபெற இருக்கிறது.












Click it and Unblock the Notifications