கும்ப்ளேவுக்காக குண்டாங்குறையாக பணத்தை வாரியிறைக்கும் வனத்துறை....!
பெங்களூர்: எங்கு பார்த்தாலும் சிக்கணம் தேவை இக்கணம் என்று அரசாங்கம் முழங்கி வருகிறது. அமைச்சர்கள் வெளிநாடு போவதை கட்டுப்படுத்துகிறார்கள். அதை இதை செய்து அவ்வப்போது சீன் காட்டுகிறார்கள். ஆனால் கர்நாடக வனத்துறையோ, அனில் கும்ப்ளேவின் அலுவலகத்தை அலங்கரிக்க மக்கள் பணத்தை தாறுமாறாக வாரியிறைத்துக் கொண்டிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் கும்ப்ளே. கேப்டனாகவும் இருந்தார்.
இப்போது கர்நாடக வனத்துறையின் வனவிலங்குள் வாரியத்தின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். இவருக்கான அலுவலக அறையைத்தான் மக்கள் பணத்திலிருந்து வாரியிறைத்து அழகூட்டியுள்ளது கர்நாடக வனத்துறை.

ஆடம்பர அறை...
பெங்களூர் வி.வி.டவர்ஸில்தான் இந்த ஆடம்பர அலுவலக அறையை கும்ப்ளேவுக்காக அமைத்துக் கொடுத்துள்ளனர்.

எப்பவாச்சும் வருவாரு...
இந்த அலுவலகத்திற்கு தினசரி வர மாட்டாராம் கும்ப்ளே. மாறாக எப்போதாவதுதான் வந்து போவாராம். ஆனால் இந்த வந்து போவதற்கே லட்சக்கணக்கில் பணத்தை இறைத்துள்ளதாம் வனத்துறை.

ஏ.சி பிட்டிங்குக்கு ரூ. 2.27 லட்சம்
இந்த அறையின் குளிர்சாதன மின் வேலைப்பாடுகளுக்காக மட்டும் ரூ. 2.27 லட்சம் பணத்தை செலவிட்டுள்ளனராம்.

பர்னிச்சர்களுக்கு ரூ. 3 லட்சம்
சேர், நாற்காலி, ஸ்டூல் உள்ளிட்ட பர்னிச்சர்களுக்காக ரூ. 3 லட்சத்தைப் போட்டுத் தாக்கியுள்ளனர்.

சி.எப்.எல் லைட்டுகளுக்கு ரூ. 99,910
சிஎப்எல் லைட்டுகளுக்காக ரூ. 99,910 செலவிட்டுள்ளனர்.

மொத்தமாக ரூ. 20 லட்சம் அவுட்
இப்படி கும்ப்ளேவின் அலுவலகத்தை பந்தோபஸ்தாக அலங்கரிப்பதற்காக கர்நாடக வனத்துறை செலவி்ட்டுள்ள தொகை ரூ. 20 லட்சமாகும்.

ஆர்டிஐ மூலம் அம்பலம்
அருள் ராஜ் என்ற ஆர்டிஐ சேவகர் விண்ணப்பித்து பெற்ற தகவல்கள் இது.

பி்ச்சை எடுக்குமாம் பெருமாளு...
ஏற்கனவே கர்நாடக வனத்துறை தன்னிடம் பணம் இல்லை என்று பல்வேறு துறைகளிடமும் பணம் பெற்று வருகிறதாம். மும்பை விலங்குகள் நல வாரியத்திடமிருந்து ஜீப்புகளை நன்கொடையாக வாங்கியுள்ளனர். ஒரு மொபைல் போன் கம்பெனியிடம் சீருடைக்கான நிதியை வாங்கியுள்ளனர். இப்படி இருக்கையில், கும்ப்ளேவுக்காக பணத்தை வாரியிறைத்துள்ளனர்.

கும்ப்ளேவுக்குத் தெரியுமா தெரியாதா....?
தனது அறையை பெரும் பொருட் செலவில் கர்நாடக வனத்துறை அலங்கரித்திருப்பது குறித்து கும்ப்ளேவுக்குத் தெரியுமா, தெரியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2009 முதல்
2009ம்ஆண்டு வாரியத்தின் துணைத் தலைவராக கும்ப்ளே நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
என்னத்தச் சொல்ல...!












Click it and Unblock the Notifications