சென்னையில் ராத்திரியானால் நல்ல மழை... மேலும் தொடருமாம்
சென்னை: செனனை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் குஷியடைந்துள்ளனர். இந்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவ மழை தற்போது கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வருகிறது. தமிழகத்திலும் ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் வட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு அல்லது அதிகாலை நேரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நல்ல மழை கொட்டியது. இன்றும் அதிகாலையில் மழை வெளுத்து வாங்கியது. பலருக்கு மழை பெய்ததே தெரியவில்லை.
எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதேபோல விழுப்புரம் மாவட்டத்திலும் கனமழை பெய்துள்ளது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
சென்னையின் சில இடங்கள் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.