ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்ய ஆளுநர் பரிந்துரை!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 6 மாத காலமாக இருந்து வரும் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்ய ஆளுநர் சையது அகமது பரிந்துரைத்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. பின்னர் பாஜகவுக்கான ஆதரவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா விலக்கிக் கொண்டது. பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து உடனே ஆட்சி அமைக்க இயலாத நிலையில் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. இந்த 6 மாத கால ஜனாதிபதி ஆட்சி தற்போது முடிவடைய உள்ளது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே ஆட்சி அமைப்பதில் உடன்பாடு ஏற்பட்டது. ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முடிவு செய்தது. முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரனின் மகன் ஹேமந்த் சோரன் பதவி ஏற்பார் என்றும் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆளுநர் சையது அகமதுவை நேரில் சந்தித்த ஹேமந்த் சோரன், ஆட்சி அமைக்க தமக்கு ஆதரவு இருப்பதாக உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்டு இன்று அம்மாநிலத்தில் நீடித்து வரும் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்யலாம் என்று பரிந்துரைத்து கடிதம் அனுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications