நடிகை லீனாவின் காதலன் சுகாஷ் சென்னை கொண்டு வரப்பட்டார்!
கர்நாடக அரசின் பெயரைப் பயன்படுத்தியும், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று புளுகியும், ரியல் எஸ்டேட் முதலாளியாக வேடம் போட்டும் வங்கிகள் மற்றும் தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டிய மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகர் கொல்கத்தாவில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரை சேர்ந்த இவர் கர்நாடக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் செய்யபடுவதாகவும் அதற்காக பணம் தேவைப்படுகிறது என்றெல்லாம் ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றியவர்.
சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில் போலியான ஆவணங்களை கொடுத்து சுகாஷ் ரூ.19 கோடி கடன் வாங்கி மோசடி செய்தார்.
இது தொடர்பாக அந்த வங்கியின் துணை பொதுச்செயலாளர் நல்லசிவம் கொடுத்த புகாரில் வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார். விதிமுறைகளை மீறி சுகாஷுக்கு கடன் கொடுத்த குற்றத்துக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் சுகாஷையும் அவரது காதலி மரியா லீனா பாலையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். 2 பேரும் டெல்லியில் பதேபூர் பகுதியில் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த போது சென்னை போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.
அப்போது வீட்டிலிருந்த சுகாஷ், போலீசைக் கண்டதும் தலை தெறிக்க ஓடி தப்பித்துவிட்டார். லீனாவை மட்டும் போலீசார் கைது செய்து சென்னை கொண்டு வந்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட லீனாவுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.
இதற்கிடையே சுகாஷ் டெல்லியிலும் கைவரிசை காட்டியிருப்பதை அம்மாநில போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களும் சுகாஷை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்காளத்தில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார் சுகாஷ்.
சுகாஷை அழைத்து வருவதற்காக சென்னையில் இருந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் டெல்லி சென்றனர். இன்று காலையில் ரெயில் மூலம் சுகாஷ் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.
பின்னர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுகாஷிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரிடம் மத்திய குற்றப் பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நடிகை லீனா மரியா பாலுடன் அவருக்குள்ள தொடர்பு, அவரையும் மோசடி செய்தது உண்மைதானா என விசாரித்து வருகின்றனர்.
சுகாஷ் செய்துள்ள மோசடிகள் ஒவ்வொன்றையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அனைத்து கேள்விகளுக்கும் சுகாஷ் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.