32,000 பட்டதாரிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டாம்: ஹைகோர்ட் தீர்ப்பு
சென்னை: கடந்த 2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 32,000 பேர் தகுதித் தேர்வு எழுதத்தேவையில்லை. அவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2010ம் ஆண்டு இறுதி வரை பதவி மூப்பு அடிப்படை முறையில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர். இதனடிப்படையில் , 2010 ஆம் ஆண்டு 32,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டது. தேர்தல் நேரம் நெருங்கியதால் பணி நியமனம் செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்படவே ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு முறையை கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு கொண்டுவந்தது. இதனையடுத்து தகுதித் தேர்வில் தேர்வானவர்கள் பைசா செலவில்லாமல் ஆசிரியர்களாக அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டனர்
அதேசமயம் 2010ல் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டோர் சார்பில் 92 பேர், தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 32,000 பேருக்கு ஆசிரியர் பணியிடம் வழங்க உத்தரவிட்டது.
அத்துடன் வழக்கு தொடர்ந்த 92 பேருக்கும் பணி வழங்குவதில் முன்னுரிமை அளிக்குமாறும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications