அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: திராவிடர் கழகம் 3 கட்ட போராட்டம்
சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை கோரி திராவிடர் கழகம் சார்ப்பில் 3 கட்ட போராட்டங்களை நடத்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள துரை சக்ரவர்த்தி நினைவகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
சாதி மறுப்பு- காதல் திருமணம் செய்துகொண்ட தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசனின் அதிர்ச்சியூட்டக்கூடிய மறைவிற்கு செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், சொல்லொணாத் துயரத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
தந்தை பெரியார் தம் வாழ் நாளில் இறுதியாக அறிவித்த தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு போராட்டமான அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையையும் வலியுறுத்தும் வகையிலும் பல கட்ட போராட்டங்களை நடத்துவது என்று இச் செயற்குழு முடிவு செய்கிறது.
முதற் கட்டமாக வரும் ஆகஸ்ட் 1ம் தேதி அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் (புதுச்சேரி, காரைக்கால் உள்பட) ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், 2வது கட்டமாக, இதில் ஒத்தக் கருத்துள்ளவர்களை அழைத்து மாநாடு ஒன்றினை நடத்துவதுடன் மாவட்ட தலைநகரங்களில் கருத்தரங்கங்கள் நடத்துவது என்றும், 3வது கட்டமாக மறியல் போராட்டத்தை நடத்துவது என்றும் இத்தலைமை செயற்குழு முடிவு செய்கிறது.
காவிரி நீர்ப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சனைகளில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் புறந்தள்ளி நடந்து கொண்டு வரும் கர்நாடகம் மற்றும் கேரள அரசுகளுக்கு இச்செயற்குழு தன் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications