தூத்துக்குடி கடலில் 3 மதுரை மாணவர்கள் மூழ்கி பலி- ஒருவரைக் காணவில்லை
தூத்துக்குடி: மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு இன்பச் சுற்றுலா வந்த மாணவர்கள் 3 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவரைக் காணவில்லை.
மதுரை திருநகரை சேர்ந்த சி.எஸ்.ராமாச்சாரி தனியார் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ படித்து வரும் 120 மாணவ, மாணவியர்கள் இன்று இன்பச் சுற்றுலாவாக தூத்துக்குடி புறப்பட்டு வந்தனர். பள்ளி ஆசிரியர்கள் தலைமையிலான குழுவினர் மாணவ, மாணவியர்களை அழைத்து வந்தனர்.
இன்று காலை தூத்துக்குடி வந்த மாணவ, மாணவியர்கள் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தை பார்வையிட்டனர். அதன்பின்னர் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பகுதிகளை பார்வையிட்ட மாணவ, மாணவியர்கள் துறைமுகத்தை அடுத்துள்ள பீச்சிற்கு சென்றனர்.
கடற்கரையில் இறங்கிய மாணவர்களில் பலர் கடலில் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கினர். மாணவர்களை ஆசிரியர்கள் கட்டுப்படுத்தி கரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
இந்தநேரத்தில் கடலில் குளித்த மாணவர்கள் கடல் அலையில் சிக்கிக் கொண்டனர். காற்று அதிவேகமாக வீசியதால் கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. இதனால் ராட்சத அலைக்குள் சிக்கிய சில மாணவர்கள் மாயமாகினர். கடலில் மாணவர்கள் மாயமானது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு படையினர் மற்றும் அப்பகுதி மீனவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாயமான மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்புப் படை வீரர்களின் தீவிர தேடுதல் வேட்டையில் கடலில் மூழ்கி பலியான மாணவர்கள் சதீஷ்குமார், தேவானந்த், விஷ்ணு ஆகியோர் உடல்கள் மீட்க்கப்பட்டது.
கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய மாணவர்கள் பாலமுருகன், பாலாஜி ஆகியோர் மீட்க்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலில் மூழ்கி மாயமான மாணவன் பரமேஸ்வரனை தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். இன்ப சுற்றுலாவிற்காக வந்த மாணவர்கள் கடலில் மூழ்கி பலியான சம்பவம் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்களது கண்முன்பாக கடல் அலையில் சிக்கி மாணவர்கள் பலியான சம்பவம் மற்ற மாணவ, மாணவியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காலையில் படுஉற்சாகமாக புறப்பட்டு வந்த மாணவ, மாணவியர்கள் சக மாணவர்கள் பலியானது கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இக்காட்சி அங்கு திரண்டு நின்ற பொதுமக்களின் கண்களில் இருந்தும் கண்ணீரை கசிய வைத்தது.
கடலில் பள்ளி மாணவர்கள் மூழ்கி பலியானது குறித்து தூத்துக்குடி தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.