கைது செய்தவர்களை விடுவிக்க கோரி இளவரசனின் பெற்றோர் காலவரையற்ற உண்ணாவிரதம்
தர்மபுரி: தர்மபுரி மருத்துவமனையில் கைது செய்யப்பட்ட 15 பேரையும் விடுவிக்கக் கோரி இளவரசனின் பெற்றோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இளவரசனின் உடலை தடயவியல் நிபுணர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதனால், மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைய யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் வழக்கறிஞர்களையும், பெற்றோர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போலீசார் அனைவரையும் கைது செய்தனர். இளவரசனின் பெற்றோர், உறவினர்களை அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தனர்.
அதேசமயம் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைக் கண்டித்து, இளவரசனின் பெற்றோர் தங்களது சொந்த ஊரான நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியில் 150க்கும் மேற்பட்டோருடன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 15 பேரையும் விடுவித்தால் மட்டுமே இளவரசனின் உடலை பெற்றுக் கொள்வோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நத்தம் காலனி பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications