நெல்லை பல்கலைக்கழக சமூகவியல் துறை தலைவருக்கு தாய்லாந்து கௌரவம்
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சமூகவியல் துறை தலைவரான பேராசிரியர் ராமகிருஷ்ணன் மருத்துவம், சமூகவியல் துறையில் செய்த சாதனைகளை பாராட்டி தாய்லாந்து அவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சமூகவியல் துறை தலைவர் பேராசிரியர் ராமகிருஷ்ணன். குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தை சேர்ந்த இவர் எம்.ஏ.எம்.பில்., பி.எச்.டி. பட்டங்களை பெற்றுள்ளார். சமூகவியல் துறையில் பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் எழுதியுள்ளார்.
வேளாண்மை, மருத்துவம், புற்றுநோய், எலும்பு முறிவு, பரம்பரை வைத்தியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியுள்ளார். லயோலா கல்லூரியில் 6 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றி உள்ளார். கடந்த 1994ம் ஆண்டு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராக இருந்தார். தொடர்ந்து 5 ஆண்டுகளாக துறை தலைவராக இருந்து வருகிறார்.
சமூகவியல் துறையின் சிறப்பான வளர்ச்சிக்கு பல்கலைக்கழக மானிய குழு ரூ.34 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளது. இவர் மேற்கொள்ளும் ஆராய்ச்சி மற்றும் கல்வி பணியை பாராட்டி குளோரி ஆஃப் இந்தியா என்ற விருதை தாய்லாந்து நாட்டின் முன்னாள் துணை பிரதமர் கொரன்டாபாரன்சி பாங்காங்கில் நடந்த விழாவில் வழங்கி கவுரவித்துள்ளார். மேலும் ஜெம் ஆஃப் இந்தியா என்ற தங்க பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications