இன்றோடு விடைபெறுகிறது தந்தி... கடைசித் தந்தி கொடுப்போரை படம் பிடிக்க ஏற்பாடு
சென்னை: கடந்த 160 ஆண்டுகளாக இந்தியாவில் அரும் சேவையாற்றி வந்த தந்தி சேவைக்கு இன்றோடு விடை கொடுக்கப்படுகிறது. கடைசித் தந்தி கொடுக்க வருவோரை வீடியோவில் படம் பிடித்து ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் இந்தியாவில் தந்திதான் மிகப் பெரிய சேவையாக இருந்து வந்தது. அவரசத் தகவல்களைத் தெரிவிக்க அத்தனை பேருக்கும் இருந்த ஒரே சேவை தந்தி மட்டுமே. உடல் நலக்குறைவு, அவசரமாக வர வேண்டும், மரணச் செய்தி என முக்கியத் தகவல்களை ஒருவருக்குத் தெரிவிக்க தந்தியைத்தான் அனைவரும் நாடினர்.
ஆனால் பேஜர் வந்ததும் தந்தியின் சேவை முதலில் மெதுவாக குறைந்தது. பின்னர் இன்டர்நெட் வந்தது, இமெயில் வந்தது, செல்போன்கள் வந்தன, எஸ்எம்எஸ் வந்தது .. அப்படியே தந்தியின் சேவை கிட்டத்தட்ட நின்று போய் விட்டது.
தந்தியை நாடுவோரை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற நிலை. இதனால் பல ஊர்களிலும் தந்தி அலுவலகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

தந்தி பிறந்த கதை
இந்தியாவில் 1850-ம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்த டைமண்ட் துறைமுகத்துக்கும் கிழக்கிந்திய கம்பெனிகளுக்கும் இடையே முதல் தந்தி சேவை அளிக்கப்பட்டது.

6400 கிலோமீட்டர் தூரத்திற்கு கம்பிகள்
1853-ம் ஆண்டு நாடு முழுவதும் 6,400 கிலோ மீட்டர் தூரத்துக்கு தந்தி கம்பிகள் பதிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டது.

வெளிநாடுகளுக்கும் தந்தி
தொடர்ந்து உள்நாடுகள் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் தந்தி சேவை அளிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இன்றோடு மூடு விழா.. ஆனால் நேற்றை முடிந்தது
160 ஆண்டுகள் சேவை புரிந்து வந்த தந்தி சேவை 15-ந் தேதியோடு நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வாரத்தின் கடைசி வேலை நாளான நேற்று அண்ணாசாலை தந்தி அலுவலகத்தில் தந்தி சேவை நிறுத்தப்பட்டது.

இன்று 2 அலுவலகங்களில் கடைசித் தந்தி
பாரி முனையில் உள்ள ஜி.பி.ஓ. கட்டிடம் மற்றும் எத்திராஜ் சாலையில் உள்ள தந்தி அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும் என்பதால் இன்று அங்கு தந்தி சேவை முற்றிலுமாக நிறுத்தப்படும்.

கடைசித் தந்திக்கு மக்கள் ஆர்வம்
கடைசி நாள் என்பதால் பலர் நேற்று தந்தி கொடுக்க வந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. சிலர் தங்களுக்குத் தாங்களே தந்தி கொடுக்க வந்திருந்தனர். அந்த தந்தியை பத்திரப்படுத்தி வைக்கப்போவதாகவும் கூறினர் அவர்கள்.

கடைசி நாளில் 368 தந்திகள்
அண்ணா சாலை அலுவலகத்தில் வழக்கமாக ஒரு நாளைக்கு 50 தந்திகள் மட்டும் பெற்று வந்த நிலையில், கடந்த 12-ந் தேதி 90 தந்திகளும், நேற்று பொது மக்களிடம் இருந்து 76 தந்திகளும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து 292 தந்திகளும் என மொத்தம் 368 தந்திகள் பெறப்பட்டன.

படம் பிடிக்கிறார்கள்
கடைசி நாளான இன்று ஜி.பி.ஓ. கட்டிடத்தில் உள்ள தந்தி அலுவலகத்திற்கு தந்தி கொடுக்க வருபவர்களை வீடியோ எடுக்கவுள்ளனர். இவற்றை எதிர்காலத்தில் கண்காட்சிகளில் காட்டப் போகிறார்களாம்.












Click it and Unblock the Notifications