ஹைதராபாத்தில் இலங்கை புறக்கணிப்பு போராட்டம் நடத்திய 5 தமிழ் சாப்ட்வேர் என்ஜினியர்கள்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஹைடெக்ஸ்(Hitex) என்னும் நிறுவனம் நடத்திய கண்காட்சியில் இலங்கை சுற்றாலத்துறை கலந்து கொண்டது. அவர்கள் அமைத்த கடையின் முன்பு நின்று கொண்டு 'இலங்கையை புறக்கணிப்போம்' என்னும் பரப்புரையை தமிழர்கள் செய்தனர். இனப்படுகொலை செய்தியை அங்கு வந்த மக்களிடம் தெரிவித்தனர்.
ஹைதராபாத் அருகில் உள்ள ஹைடெக் சிட்டியில் நடந்த வர்த்தக கண்காட்சியில் இலங்கை சுற்றுலாவை ஊக்குவிக்க கடை அமைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த தமிழ் உணர்வாளர்கள் 5 பேர் சிங்கள கடையின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சுமார் 30 நிமிடங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி இலங்கையை எதிர்த்து கோஷங்கன் எழுப்பியுள்ளனர்.
‘என்ன செய்யலாம் இதற்காக' என்ற புத்தகத்தை அங்கிருந்த பொதுமக்களிடம் காட்டி இலங்கை அரசு தமிழர்களின் மேல் கட்டவிழ்த்த கொடூரத்தை படங்கள் மூலம் விளக்கினர். விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்தையும் அங்குள்ள மக்களிடம் காட்டினர். இதை பார்த்த பொதுமக்கள் சிலரும், ஊடகத் துறையினரும் தமிழர்களுடன் சேர்ந்து ஆர்பாட்டத்தில் குதித்துள்ளனர். இலங்கை சுற்றுலா கண்காட்சி நடத்தும் நபர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தங்கள் கடையை மூடிவிடுவதாக ஒரு கட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் தமிழகத்தில் இருந்து வந்த தொடர் அழைப்புகளை தொடர்ந்து மதியம் 3 மணி அளவில் தமிழர்கள் அனைவரையும் ஆந்திரா காவல்துறை விடுதலை செய்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் அனைவரும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்யும் சாப்ட்வேர் என்ஜினியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.