மூளைச்சாவு- பீடித் தொழிலாளியின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்
நெல்லை: நெல்லை அருகே விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்த பெண்ணில் உடல் உறுப்புகள் 5 நபர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.
பணகுடி தர்மலிங்கபுரம் வடக்கு தெருவே சேர்ந்தவர் பன்னீர்செல்வன். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மின் விபத்தில் பலியானார். இவரது மனைவி சாந்தி, பீடி சுற்றும் தொழிலாளி. இவர்களுக்கு சுபாஷினி என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். சுபாஷினி பிளஸ்2-வும், மணிகண்டன் பிளஸ்1ம் படித்து வருகின்றனர்.
கடந்த 10ம் தேதி சாந்தி தன்னுடன் வேலை பார்க்கும் 2 பெண்களுடன் பணகுடி நான்கு வழி சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாந்திக்கு உடல், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் அவர் மூளைச்சாவு அடைந்து உடல் நலம் தேற முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சாந்தியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன் வந்தனர். நெல்லை கிட்னி கேர் தலைமை மருத்துவர் டாக்டர் சுப்பிரமணியன் தலைமையில் சாந்தியின் உடலில் செயல்படும் நிலையில் இருந்த 2 கண்கள், 2 சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை அகற்றி 5 பேருக்கு பொருத்தப்பட்டது. இதன் காரணமாக 5 பேர் புது வாழ்வ பெற்றுள்ளனர்.