டெல்லியில் காரில் இருந்து 99 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல், 2 பேர் கைது
டெல்லி: டெல்லியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது ஒரு காரில் இருந்து 99 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி சோனியா விஹார் பகுதியில் சிறப்பு படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரின் ஹெட்லைட்டுக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 99 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் காரில் இருந்த பீகார் மாநிலம் முங்கர் மாநிலத்தைச் சேர்ந்த மிஷ்ரா மற்றும் பிரோஸ் ஆலம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் முங்கரில் தயாரிக்கப்பட்டவை. முங்கரில் சட்டவிரோதமாக செயல்படும் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு 130 முங்கர் துப்பாக்கிகள் டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை விற்கப்படும் இந்த துப்பாக்கிகளுக்கு கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி மற்றும் வங்கதேசத்தில் நல்ல கிராக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications