குற்றாலத்தில் சாரல் விழா... ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை: பயணிகளைக் கவர திட்டம்
குற்றாலம்: குற்றாலம் சாரல் விழாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கார், பழம், மூலிகை கண்காட்சி இடம் பெறுகிறது.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் சாரல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுவிழா வரும் 27ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது தொடர்பான ஆய்வு பணிகளை மாவட்டஆட்சிதலைவர் சமயமூர்த்தி குற்றாலத்தில் மேற்கொண்டார். டவுன் பஞ்., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலைவாணர் கலையரங்களை பார்வையிட்டு அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். சிறுவர் பூங்கா, காட்டேஜ்கள், மெயின் அருவியில் ஆய்வு செய்தார். சுற்றுலா பயணிகளிடம் தேவை குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

ஐந்தருவி பழத்தோட்ட அருவி, எக்கோ பார்க் பகுதியினை பார்வையிட்டார். தொடர்ந்து மாவட்டஆட்சிதலைவர் சமயமூர்த்தி கூறியதாவது:
குற்றாலத்தில் சாரல் விழா வரும் 27ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குற்றாலத்தில் முதல் முறையாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாரல் விழாவில் கார், பழம் மற்றும் மூலிகை கண்காட்சிகள் நடத்தப்பட இருக்கிறது.
குற்றாலத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இப்பணியில் சுமார் 40 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் அருகிலுள்ள டவுன் பஞ்சாயத்துக்களில் இருந்து துப்புரவு பணியாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் குற்றாலத்தில் காணப்படும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாகவும், கார்களுக்கு அதிகளவில் கட்டணங்கள் வசூலிப்பதாக வரும் புகாரினை கண்காணிக்க 10 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு பணிகள்
குற்றாலத்தில் சுகாதாரம், போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு, கூடுதலாக வாகன நிறுத்த கட்டணம் வசூல் செய்தல் மற்றும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக துணை கலெக்டர் அந்தஸ்தில் நெல்லை ஆய்வு குழு தலைவர், நெல்லை தனித்துணை ஆட்சியர் (முத்திரை), தனித் துணை ஆட்சியர் (சிறப்பு செயலாக்கம்), நெல்லை உதவி ஆணையர் (கலால்),பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், பஞ்.,களின் உதவி இயக்குனர், டவுன் பஞ்.,களின் உதவி இயக்குனர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு), தணிக்கை துறை உதவி இயக்குனர் ஆகியோர் 15ம் தேதிமுதல் வரும் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் ஒருவர் என்ற அடிப்படையில் பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறுநெல்லை மாவட்டஆட்சிதலைவர் சமயமூர்த்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications