நடிகை அஞ்சலி ஆட்கொணர்வு மனு வாபஸ்: ஹைகோர்ட் தள்ளுபடி!
சென்னை: நடிகை அஞ்சலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவரது சித்தி வாபஸ் பெற்றுக் கொண்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அஞ்சலி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென்று காணாமல் போனார். இதனையடுத்து அவரது சித்தி
எஸ்.பாரதிதேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருந்ததாவது: அஞ்சலி என்கிற பாலா என்கிற திரிபுரசுந்தரி எனது சகோதரி பார்வதிதேவியின் மகள். அஞ்சலியை நான் தத்து மகளாக எடுத்துக்கொண்டேன். இதற்கான நடைமுறைகளை கோடம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செய்திருக்கிறேன்.

தெலுங்கு படத்தில் நடிக்க கடந்த மார்ச் 31ஆம் தேதி எனது கணவருடன் அஞ்சலி ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு தாஸ் பல்லவா என்ற ஓட்டலில் இரண்டு பேரும் அறை எடுத்துத் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி காலையில் என் கணவர் கண்விழித்து பார்த்தபோது, அஞ்சலியைக் காணவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
நான் வளசரவாக்கம் போலீஸ் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடமும் ஏப்ரல் 10ஆம் தேதி புகார் கொடுத்தேன். இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அஞ்சலியை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஞ்சலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுகிறேன். அவர் காணாமல் போய் சில நாட்கள் ஆகிவிட்டதால், உயிருடன் இருப்பாரோ என்ற அச்சம் உள்ளது. எனவே அஞ்சலியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அஞ்சலி தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம், வக்கீல் முகுந்தன் ஆஜரானார்கள். அரசுத்தரப்பில் வக்கீல் தம்பிதுரை ஆஜரானார்.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தம்பிதுரை, ஏற்கனவே பெங்களூரில் போலீஸ் அதிகாரி முன்பு நடிகை அஞ்சலி ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளார். எனவே அவர் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூற முடியாது என்றார்.
அஞ்சலி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "அஞ்சலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று இங்கு வழங்கு தாக்கல் செய்துவிட்டு, அவரிடம் ஜீவனாம்சம் கேட்டு மற்றொரு மனுவை வேறு நீதிமன்றத்தில் பாரதிதேவி தாக்கல் செய்துள்ளார். இதை ஏற்க முடியாது" என்றார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக பாரதிதேவி தரப்பில் கூறப்பட்டதால் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications