திமுக துணை பொதுச் செயலாளர் எஸ்.பி. சற்குண பாண்டியன் ராஜினாமா?
சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.பி.சற்குண பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
திமுக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.பி.சற்குண பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. ஆகியோர் அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் எஸ்.பி.சற்குண பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனது பதவியை திமுக எம்.பி. கனிமொழிக்கு வழங்குமாறு அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த கடிதம், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மூலம் திமுக தலைவர் கருணாநிதியிடம் சேர்க்கப்பட்டதாகவும், இதை படித்துப் பார்த்த அவர் கடும் அதிர்ச்சி அடைந்து அந்த கடிதத்தை அப்படியே மூடி வைத்துவிட்டதாகவும் திமுக வட்டாரங்களில் தகவல் பரவி வருகின்றது.
ஆனால், இந்த சம்பவம் குறித்து திமுக தரப்பில் இருந்து எந்தவிதமான கருத்தும் வெளியிடப்படவில்லை.