அருப்புக்கோட்டை அருகே பெண் மீது மிளகாய் பொடி தூவி தாலிச் செயினை பறித்துச் சென்ற மாணவர்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஒரு பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவரின் தாலிச் செயினை மாணவர் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை செக்கடி தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (60). இவர் அங்குள்ள தனியார் மில்லில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி (56). இவர் அருகில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு சிவன்கோயில் தெரு வழியாக வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை சாந்தி கண்களில் வீசிவிட்டு, அவரது கழுத்தில் இருந்த 19 பவுன் தாலி செயினை பரித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டார்.
இதனால் சாந்தி சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். உடனே, இது குறித்து அருப்புக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, இன்பெக்டர் ரவி தலைமையில் தனிப்படை அமைத்து அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். அப்போது சொக்கலிங்கபுரம் பஸ் ஸ்டாப்பில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருத நபரை பிடித்து விசாரித்த போது, அவர் சேடப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார்(22) (பாலிடெக்னிக் மாணவர்) என தெரிய வந்தது.
சாந்தி கண்ணில் மிளகாய் பொடி தூவி 19 பவுன் செயினை பறித்து சென்றதும் இவர் தான் என்று தெரிய வந்தது. இதனையடுத்து கிருஷ்ணகுமாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த தாலிச் செயினை பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications