ஆந்திராவில் வெள்ளம்: மீட்புப் பணியில் ராணுவத்தினர் தீவிரம்
ஹைதாராபாத்: வடக்கு ஆந்திராவில் பெய்து வரும் பலத்த மழையால் 300 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.
வடக்கு ஆந்திராவின் அடிலாபாத், கரீம்நகர், வாரங்கல், கம்மம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் வட மாவட்டங்களில் உள்ள முக்கிய நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. ஏரிகள் உடைந்து வெள்ளநீர் ஊருக்குள் புகுந்துள்ளது. மழை வெள்ளத்திற்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோதாவரி ஆற்றில் கடந்த 32 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப்பெருக்கால், நூற்றுக்கணக்கான கிராமங்களில் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
வாரங்கல், கம்மம், கரீம்நகர், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
ஆற்றில் மட்டும் நீர்வரத்து 17 லட்சம் கன அடியாக உள்ளது. இதற்கு முன் 1981ஆம் ஆண்டு 36 லட்சம் கன அடியாக இருந்தே மிக அதிகமான நீர்வரத்தாக கருதப்படுகிறது.
இதற்கிடையே மாநிலத்தின் வெள்ள நிலைமை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி, போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 100 முகாம்களை அமைத்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமப் புற மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லும் பணியில் ராணுவத்தினர் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஏராளமான கிராமங்கள் பக்கத்து நகரங்களிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்து தீவுகளான கிராமங்களை கண்டறிந்து உணவு, குடிநீர் பாக்கெட், மருந்து பொருட்களை போடும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.
கம்மம் மாவட்ட மீட்பு பணிக்காக ஒரு ஹெலிகாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 3 பிரிவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு தெலங்கானாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கம்மம் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றில் 56.4 அடி உயரத்துக்கு வெள்ளம் செல்கிறது.
பத்ராசலத்தில் பத்ராசலம் கோயில் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மீட்பு பணியில் சிறப்பு அதிகாரிகளை வெள்ளம் பாதித்த பகுதிக்கு மாநில அரசு அனுப்பியுள்ளது. இந்த மாவட்டங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications