பொது சொத்துகளுக்கு சேதம் வழக்கு: விசாரணை அதிகாரிக்கு முன்பு ராமதாஸுக்கு பதில் வழக்கறிஞர்கள் ஆஜர்?

கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி மாமல்லப்புரத்தில் வன்னியர் சங்க மாநாடு நடந்தபோது மரக்காணம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், பாமகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. இந்த சம்பவத்தை கண்டித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்று கைதானார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
அவர் கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. மேலும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. இதில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக பாமகவினர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் 1992-ன் படி இழப்பீட்டு தொகையை பாமகவிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. இதன்படி வருவாய்துறை நிர்வாக ஆணையர் ஸ்ரீதர் சிவில் நீதிபதியாக இருந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதில் சேலத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக இன்றும், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக நாளையும் ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய்த் துறை நிர்வாக ஆணையரும், விசாரணை அதிகாரியுமான டி.எஸ். ஸ்ரீதர் முன்பு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருக்கும் ராமதாஸுக்கு பதில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications