உத்தரகாண்ட் வெள்ளத்தில் 5400 பேர் மாயம்: அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு
டேராடூன்: உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய 5400 பேர் காணவில்லை என்று அம்மாநில பேரிடர் மீட்பு குழு ஆணையர் அஜய் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு காரணமாக இந்தக் கோரத்தை சந்தித்தது உத்தரகாண்ட் என்பது நினைவிருக்கலாம்.

ஆயிரக்கணக்கில் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். மேலும் ஆயிரக்கணக்கானோர் மாயமானார்கள்.

சீரழிந்து போன கேதர்நாத்
கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புனித இடங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட வெளி மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். காடு, மலைகளில் சிக்கித் தவித்தவர்களை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.

5400 பேர் மாயம்
இந்த நிலையில், மாயமான 5400 பேரை தேடும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வந்தது. இதுவரை அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆண்கள் அதிகம் - பெண்கள் 914
அனைவருமே மாயமாகி விட்டதாக உத்தரகாண்ட் மாநில பேரிடர் மீட்பு குழு ஆணையர் அஜய் தெரிவித்துள்ளார். இதில், 4035 பேர் ஆண்கள் என்றும், 914 பேர் பெண்கள் என்றும், 451 பேர் குழ்நதை என்றும் அவர் கூறியுள்ளார்.

மீண்டும் நிலச்சரிவு
உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கனமழை பெய்ததில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சமவுளி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் மண்ணில் புதைந்தன. இருப்பினும் மக்களுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் விரிசல்
தியோசரி கிராமத்தில் 14 வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. பாவுரி மாவட்டம் கடாலி கிராமத்தில் பள்ளிக்குச் செல்லும் சாலை சேதமடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications