தூத்துக்குடியை கலக்கிய கொள்ளை கும்பல் கைது: ரூ.1.20 கோடி நகை, பணம் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி, கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்ட 14 கொள்ளையர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை மீட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர், திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வழிப்பறி, வீடுகளை உடைத்து நகை, பணம், செல்போன்கள், கேமரா உள்ளிட்ட பொருட்களை மர்மகும்பல் கொள்ளையடித்து வந்தது.

இது தவிர தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து நகைகளை பறித்து செல்லுதல் போன்ற சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வந்தது. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடந்து வந்த நகைபறிப்பு, கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வந்தனர்.
இதனையடுத்து கொள்ளையர்களை கைது செய்திட நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை ஆகியோரின் உத்தரவின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் பழனிக்குமார், ஞானசேகரன், ராஜேந்திரன், பெஸ்கி, நாராயணன், தனிப்படை துணை ஆய்வாளர் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியுடன் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக சிக்கியவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். போலீசாரிடம் சிக்கிய ராஜேஷ், ரூபன், மிக்கேல் உள்ளிட்ட 14 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மாவட்டத்தில் நடந்த 41 கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

பிடிபட்ட கொள்ளையர்களிடம் இருந்து 59 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 40 கிராம் வெள்ளி பொருட்கள், 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 லாரிகள், ரூ.11,000 ரொக்கம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளையர்களை பிடித்து அவர்களிடம் இருந்த கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை திறம்பட மீட்ட தனிப்படையினரை நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை ஆகியோர் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications