தெளிவான எதிர்கால சிந்தனையோடு... மீண்டும், படிப்பை தொடர விரும்பும் ‘தர்மபுரி’ திவ்யா
சென்னை: தர்மபுரி திவ்யா தன் படிப்பை மீண்டும் தொடர விரும்புவதாகவும், எதிர்காலம் பற்றிய, உறுதியான எண்ணத்துடன் இருப்பதாகவும், அவருக்கு கவுன்சிலிங் அளித்த டாக்டர்கள் குழு சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
காதல் அதனைத் தொடர்ந்து கலப்புத் திருமணம் செய்து கொண்ட தர்மபுரி இளவரசன் - திவ்யா ஜோடியால் தர்மபுரியில் பெரிய கலவரம் வெடித்தது. தலித் மக்களின் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டன. திவ்யாவின் அப்பா நாகராஜன் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் திவ்யா குறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் திவ்யாவின் தாயார். முதலில் தாயாருடன் செல்ல மறுத்த திவ்யா, ஒரு கட்டத்தில் இளவரசனுடன் வாழ விருப்பமில்லை எனக் கூறி தாயாருடன் சென்றார்.

இளவரசன் மரணம்...
திவ்யா வாழ மறுத்த மறுநாள் காலை, அதாவது ஜூலை 4ம் தேதி தர்மபுரி அரசு கல்லூரி அருகே தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார் இளவரசன். இதனைக் கேள்விப்பட்டு அதிர்ந்து போன திவ்யா, சாப்பிட மறுத்து அழுது கொண்டே இருந்ததாக அவரது அம்மா தெரிவித்தார்.

அழுது புரண்ட திவ்யா...
இளவரசன் மரணம் கொலையா, தற்கொலையா என விவாதங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தன்னால் தான் என இவ்வளவு பிரச்சினையும் என திவ்யா ஒருபுறம் புலம்பிக் கொண்டே இருப்பதாக தெரிய வந்தது.

கவுன்சிலிங்...
இதனால் அவர் விருப்பப்பட்டால், அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது. திவ்யாவும் அவரது குடும்பத்தினரும் கவுன்சிலிங்கிற்கு விருப்பம் தெரிவித்த நிலையில் கடந்த வாரத்தில் அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

ஒத்துழைப்பு...
கவுன்சிலிங் குறித்த அறிக்கையை சென்னை ஹைகோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர் மருத்துவர்கள். அதில், தர்மபுரி, அரசு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும், மனநலத் துறையின் தலைவருமான, டாக்டர் ரவிசங்கர் அளித்த அறிக்கையில், டாக்டர் ரவிசங்கர், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இணைப் போராசிரியர் டாக்டர் சபிதா, உதவிப் பேராசிரியர் சாந்தி ஆகியோர் அடங்கிய குழு, திவ்யாவை பரிசோதித்தது. இரண்டு நாட்களில், நான்கு மணி நேரம் கவுன்சிலிங் நடந்தது; திவ்யா ஒத்துழைப்பு அளித்தார்.

படிப்பைத் தொடர விருப்பம்...
தகவல்களை தெளிவாக கூறினார்.படிப்பைத் தொடர விரும்புகிறார். எதிர்காலம் பற்றி உறுதியான எண்ணத்துடனும் உள்ளார். நம்பிக்கை தரும் எதிர்காலத்தை பற்றி, அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. கவலையில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள், அவருக்கு கற்றுத் தரப்பட்டது.

இப்போதைக்கு போதுமானது...
நடைமுறை வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்தில், பயிற்சி வழங்கப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சிக்குப் பின், நன்றாக இருப்பதாகவும், திருப்திகரமாக இருப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர். இதுவே தற்போது போதுமானது என்றும் தெரிவித்தனர்.

இளவரசன் குடும்பத்தினர்...
எதிர்காலத்தில் தேவைப்பட்டால், உள்ளூர் மனநல மருத்துவரை தொடர்பு கொள்வதாகவும் கூறினர்.இளவரசனின் பெற்றோரைப் பொறுத்தவரை, அவர்கள் கவுன்சிலிங்குக்கு வரவில்லை. அவர்களை தொடர்பு கொண்ட போது, இளவரசனின் இறுதி சடங்குக்கான பணியில் இருப்பதாக தெரிவித்தனர் என இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications