மிஸ்டர் அமர்த்தியா சென்.. அரசியலில் மூக்கை நுழைக்க வேண்டாம்: சிவசேனா
மும்பை: பொருளாதார மேதையான அமர்த்தியா சென் தேவையில்லாமல் அரசியலில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று சிவசேனா கேட்டுக் கொண்டுள்ளது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகக் கூடாது என்று தொடர்ந்து கூறிவருவதால் நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென்னுக்கு பாஜக்வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் என்றும் கூட பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது சிவசேனாவும் இந்த சர்ச்சையில் குதித்துள்ளது. அக்கட்சியின் ஏடான சாம்னாவில் இன்று எழுதப்பட்ட தலையங்கத்தில், சர்வதேச அளவில் மதிக்கப்படுகிற பொருளாதார மேதை அமர்த்தியா சென். அவரிடம் இருந்து பாரத ரத்னா விருதை பறிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் நியாயமானது அல்ல. இருப்பினும் ஒரு பொருளாதார மேதை இப்படி அரசியல் பேசுவது சரியல்ல..
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. இதற்கு ஒரு மருந்தைக் கூறாமல் மோடியை விமர்சித்து வருகிறார். அமர்த்தியா சென் அரசியலில் மூக்கை நுழைக்காமல் இருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications