32 டன் ரயிலை சாய்த்து விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய ஜப்பானியர்கள்
டோக்கியோ: ஜப்பானில் ரயிலில் இருந்து இறங்கும் போது ரயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே கால் மாட்டிக் கொண்ட பெண்ணை, சக பயணிகள் ரயிலையே சாய்த்து மீட்ட ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது.
ஜப்பான் நாட்டில் உள்ள சாய்தாமா நகரில் உள்ள மினாமி உரவா ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் இருந்து பயணிகள் இறங்கும் போது, எதிர்பாராதவிதமாக 30 வயது பெண் ஒருவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டது.
பாதுகாப்புப் படையினர் வந்து காப்பாற்றட்டும் என அலட்சியமாக இராமல், உடனடியாக் அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ளனர் சக பயணிகள்.

யோசனை... மஞ்சி வாண்டு தான்...
ரயிலை லேசாக சாய்த்தால், அப்பெண்ணை உடனடியாக மீட்டு விடலாம் என அங்கிருந்த சிலர் ஐடியா கொடுக்க, அனைத்து சக பயணிகளுக்கும் அது மிகச் சரியான யோசனையாகவே பட்டது.

தள்ளு... தள்ளு... தள்ளு...
உடனடியாக செயலில் இறங்கிய அவர்களின் முயற்சிக்கு, ரயிலில் இருந்த மற்றப் பயணிகளும் கைகோர்த்திட அனைவரும் ஒன்று திரண்டு ரயிலை சாய்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ரயில்வே ஊழியர்களின் ஆதரவும் இவர்களுக்கு கிடைத்தது.

பாதுகாப்பாக மீட்டனர்...
அவர்களின் 5 நிமிட அசூர முயற்சியில், 32 டன் ரயிலை எளிதாகச் சாய்த்து விட்டார்கள். பாதுகாப்பாக மீட்கப்பட்ட அப்பெண், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விடாமுயற்சி, விஸ்வரூப வெற்றி...
இது குறித்து சம்பவ இடத்தில் இருந்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும் போது, "தவறுதலாக கால் மாட்டிக்கொண்ட அந்த பெண்ணை காப்பாற்ற பயணிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். அனைவரும் ஒன்று சேர்ந்து 32 டன் எடையுள்ள ரெயிலை அப்படியே லாவகமாக தூக்கி சாய்த்தனர். சுமார் 5 நிமிடம் மட்டுமே நடந்த இந்த மீட்பு பணியால் அந்த பெண் காப்பாற்றப்பட்டார்" என ஆச்சர்யம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications