பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர்- குற்றவாளிக்கான தண்டனை நாளை ஒத்திவைப்பு!
டெல்லி: டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் சம்பவத்தில் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற குற்றவாளி ஷாஹ்சத் அகமதுவுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்று டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டெல்லியில் 2008ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி ஜாமியா நகர் பகுதியில் பாட்லா ஹவுஸ் எனும் குடியிருப்பில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் 7 பேர் பதுங்கியிருப்பதாக கூறி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் 2 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஷாஹ்சத் என்ற தீவிரவாதி மட்டும் கைது செய்யப்பட்டார்.
இந்த மோதலில் டெல்லி என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட் மோகன்சந்த் சர்மாவும் உயிரிழந்தார். இந்த என்கவுன்ட்டர் இப்போதும் கடும் சர்ச்சையை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாஹ்சத், குற்றவாளி என கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி நீதிமன்றம் அறிவித்தது.
மேலும் ஷாஹ்சத்துக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்று கூறி நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications