இட ஒதுக்கீட்டைத் தூக்கி குப்பையில் போட்ட சென்னை ஐஐடி... சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
சென்னை: அரசின் இட ஒதுக்கீட்டை சற்றும் மதிக்காமல் தன் இஷ்டத்திற்கு ஆசிரியர்களை நியமித்துள்ளது சென்னை ஐஐடி. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அத்தனை 1995 முதல் 2000மாவது ஆண்டு வரை செய்யப்பட்ட அத்தனை நியமனங்களையும் விரிவாக விசாரிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
ஐஐடி நிர்வாகம் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சற்றும் மதிப்பதில்லை என்று முன்பே புகார்கள் எழுந்தன. ஆனால் இந்த முறைதான் அது வகையாக மாட்டியுள்ளது.
மேலும் நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாகவும் சென்னை ஐஐடி தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் நியமனத்தில் அது சிக்கியுள்ளது.

டாக்டர் வசந்தா தொடர்ந்த வழக்கு
டாக்டர் டபிள்யூ. பி. வசந்தா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

1995 முதல் முறைகேடான நியமனம்
அதில், கடந்த 1995ம் ஆண்டு முதல் பல்வேறு ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை. இவை அனைத்தும் முறையாக நிரப்பப்படவில்லை. குறிப்பாக இதில் கடைப்பிடிக்கப்பட்ட தேர்வுமுறை சட்டவிரோதமானது.

நியமனங்களை ரத்து செய்க
எனவே இந்த நியமனங்கள் அனைத்தையும் பரிசீலித்து ரத்து செய்து உத்தரவிட வேண்டும். புதிய நியமனங்களுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார் டாக்டர் வசந்தா.

ஐஐடி தலைவர், இயக்குநர்களுக்கு நோட்டீஸ்
வழக்கை விசாரித்த நீதிபதி நாகமுத்து, மனுவை விசாரணைக்கு ஏற்றார். மேலும், இதுதொடர்பாக ஐஐடி சென்னையின் தலைவர், இயக்குநர்கள் குழு, இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஒதுக்கீட்டை பின்பற்றி நியமனம்
மேலும் டாக்டர் வசந்தாவை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் உதவிப் பேராசிரியர் பதவி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
மேலும் 1995 முதல் 2000 மாவது ஆண்டு செப்டம்பர் 26 வரையிலான அனைத்து பணி நியமனங்கள் குறித்தும் சிபிஐ விரிவான விசாரணை நடத்த வேண்டும். இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications