புலிகளைக் காக்க இளம் தலைமுறையினர் உறுதி!
சென்னை: இந்தியாவின் தேசிய விலங்கு புலி. மேற்கு வங்க மாநில விலங்கும், வங்கதேசத்தின், தேசிய மிருகமும் புலிதான். உலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட 13 ஆசிய நாடுகளின் காடுகளில் புலிகள் உயிர்வாழ்கின்றன.
வங்கப்புலி, மலேயப்புலி, சுமத்ரா (இந்தோனேசியா) புலி, சைபீரியன் புலி, தென் சீனப்புலி என, பல வகை புலிகள் உள்ளன. புலியின் மீதுள்ள கோடுகள் ஒவ்வொன்றுக்கும் வித்தியாசப்படும்.
கடந்த 1900ம் ஆண்டில், உலகில் லட்சம் புலிகள் இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.19ம் நூற்றாண்டில், இந்தியாவில் 37 ஆயிரம் புலிகள் இருந்ததாகவும், 1969ல், புலிகள் எண்ணிக்கை 2,500 ஆக குறைந்துவிட்டதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
புலிகளின் எண்ணிக்கை சீராக இருந்தால் தான், வனத்தின் இயல்பு நிலையை பாதுகாக்க முடியும். இல்லையெனில் மேய்ச்சல் விலங்குகள் எண்ணிக்கை அதிகமாகி, காடுகளின் வளம் குறையும். காடுகளின் காவலனாக இருக்கும் புலிகளை பாதூக்க வலியுறுத்தி ஆண்டுதோறும் ஜூலை 29ம் தேதி, உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மருத்துவ குணம் கொண்ட புலி
புலிகளின் எலும்பு, பற்கள், நகம், தோல் என அனைத்து உறுப்புகளும் மருத்துவ குணம் கொண்டவையாக கருதப்படுகிறது. சீனாவில், இவற்றைக் கொண்டு நாட்டு மருந்தும் தயாரிக்கின்றனர். எனவே வேட்டையாடப்படுவது அதிகரித்தது.

அழிந்து வரும் புலிகள்
உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் 97 சதவீதம் அழிந்து விட்டன. அதாவது ஒரு லட்சம் புலிகளில், தற்போது வெறும் 3,200 புலிகள் மட்டுமே வாழ்கின்றன. உலகில் புலிகளின் இயற்கை வாழ்விடங்களில், 93 சதவீதம் அழிக்கப்பட்டு, அது விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறி விட்டது.

புலி வேட்டைக்குத் தடை
மத்திய அரசு 1970ல், புலி வேட்டைக்கு தடை விதித்து சட்டம் இயற்றியது. இந்தியாவில், மொத்தம் 43 சரணாலயங்கள் உள்ளன. புலிகளுக்கான முதல் சரணாலயம், உத்தரப்பிரதேசம் நைனிடால் மாவட்டத்தில், 1973ம் ஆண்டு, ஏப்.,1ல் துவக்கப்பட்டது. இந்த ஆண்டு, மார்ச் 15ல், சத்தியமங்கலம் வனப்பகுதி, புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

புலிகள் கணக்கெடுப்பு
இந்த வனங்களில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது. இதன்படி 2011ம் ஆண்டில், 1706 புலிகள் உள்ளதாக தெரியவந்தது. கடந்த 2006ல் இருந்த எண்ணிக்கையைவிட 296 புலிகள் அதிகமாகியுள்ளன.

வனங்களுக்கு பாதுகாப்பு
புலிகள் இருந்தால்தான், காடு பாதுகாப்பாக இருக்கும்; நாடும் நன்றாக இருக்கும். புலி இருந்தால், அங்கு புள்ளி மான், யானைகள் அதிகளவில் இருக்கும். உணவுக்கு மான் போன்ற விலங்கினங்கள் இல்லாதபோது புலிகள் நாட்டிற்கு உள்ளேயும் ஊடுருவுகின்றன.

மாணவிகள் விழிப்புணர்வு
உலக புலிகள் தினத்தையொட்டி ஜூன் 29ம் தேதி கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் விழா நடந்தது. அந்த விழாவில் கம்மவார் பெண்கள் மேனிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு புலிகளை காக்க உறுதிமொழி எடுத்தனர். அந்த விழாவில் பேசிய பாரதி நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன், ‘‘உலகத்தில் பாலின்நேசி, வங்கப்புலி, மலையாபுலி, சுமத்ராபுலி, சைபீரியாபுலி, தென் சீனபுலி, ஜீவா, இந்தியசீன புலி என எட்டுவிதமான புலிகள் இருந்தன. இதில் ஜீவா மற்றும் பாலின்நேசி ஆகிய வகைப் புலிகள் அழிந்துவிட்டன. இவ்வகைப் புலிகளை படத்தில்தான் பார்க்க முடியும். மீதமுள்ள ஆறு வகை புலிகள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது என்றார்.

புலிகளுக்கு ஆபத்து
உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக்காடுளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. இவ்வகை புலிகள் பெங்காலி புலிகள் என அழைக்கப்படுகின்றன. இருப்பினும் இப்பகுதியில் வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயரும் ஆபத்து உள்ளதால், இங்கு வாழும் புலிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது தற்போது வனங்களில் உள்ள புலிகளைக் காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications