தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்கும் கோரிக்கை மீண்டும் எழும் அபாயம்?
சென்னை: ஆந்திராவைப் பிரித்து தனித் தெலுங்கானா உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அவ்வப்போது எழும் வடதமிழ்நாடு, தென் தமிழ்நாடு, மேற்கு தமிழ்நாடு பிரிவினை முழக்கம் மீண்டும் எழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தெலுங்கானா உதயமானது போதும்.. நாடு முழுவதும் பெரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டே ஆக வேண்டும் என்ற கோரிக்கை ஒவ்வொன்றாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது தெலுங்கானா உருவாகவிருப்பதால் தமிழகத்தையும் மூன்றாகப் பிரிக்கும் கோரிக்கை மீண்டும் சூடு பிடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

பாமகவின் பிரிவினை கோரிக்கை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வட தமிழ்நாடு என்ற தனி மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போர்க்குரல் எழுப்பினர்.

சித்தூரையும் சேர்க்கக் கோரிக்கை
அத்துடன் ஆந்திராவின் ராயலசீமா பகுதியான சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்க் கிராமங்களையும் வட தமிழ்நாட்டில் இணைக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாகும்.

சேதுராமனின் தென் தமிழ்நாடு
இதேபோல் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் டாக்டர் சேதுராமன், மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தென் தமிழ்நாடு என்ற தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று கோரினார். கேரளாவுடன் இணைக்கப்பட்ட தேவிகுளம், பீர்மேடு, மூணாறு ஆகியவற்றை தென் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்பது அந்தப் போராட்டக்கார்களின் கோரிக்கை.

மேற்கு தமிழ்நாடு - இது கொமுக கோரிக்கை
கொங்கு நாடு எனப்படும் கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு மேற்கு தமிழ்நாட்டை தனி மாநிலமாக்க வேண்டும் என்பதற்காகவே கொங்குநாடு முன்னேற்றக் கழகம் உதயமானது. மிகுந்த எழுச்சியோடு உதயமான இந்த இயக்கம் அரசியல் மற்றும் உட்கட்சி மோதல்களால் தேக்கநிலையில் உள்ளது.

மறுபடியும் சூடு பிடிக்கலாம்
தற்போது ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டுவிட்ட நிலையில் உத்தரபிரதேசம் ,மேற்குவங்கம், மகாராஷ்டிரா ஆகியவை பிரிவினையை எதிர்கொண்டுள்ள நிலையில் தமிழகத்திலும் அத்தகைய கோரிக்கைகள் எழக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications