வேலூர் பாஜக வழக்கறிஞர் அணி தலைவரை கொல்ல முயற்சி; காயத்துடன் தப்பினார்!
அரக்கோணம்: வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் அணி தலைவர் தனசேகரனை, அரக்கோணத்தில் இன்று மர்ம நபர்கள் கொல்ல முயற்சித்தனர், ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் காயத்துடன் உயிர் தப்பினார்.
வேலூர் மாவட்ட பா.ஜனதா வழக்கறிஞர் அணி தலைவர் தனசேகரன் அரக்கோணம் வந்திருந்த நிலையில், அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவர் மீதும், அவருடன் சென்ற மூன்று நபர்கள் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அவர் காயத்துடன் உயிர் தப்பினார்.
தாக்குதலில் காயமடைந்த தனசேகரன் உள்ளிட்டவர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பா.ஜனதா மாநில பொதுச் செயலாளரான சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்ட சில நாட்களுக்குள் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தால், அரக்கோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.