காதலை பிரிக்கப் பார்க்கிறார், காதலனை கொல்ல முயல்கிறார்: டைரக்டர் சேரன் மகள் போலீசில் புகார்

குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில் வல்லவர் சேரன். அவரது மனைவி செல்வராணி. அவர்களுக்கு நிவேதா மற்றும் தாமினி(20) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சேரன் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சேரனின் 2வது மகள் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மீடியா 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் இன்று காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். தனது தந்தை தன்னையும், தனது காதலன் சந்துருவையும் பிரிக்க முயற்சிப்பதாக புகார் அளித்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சூளைமேட்டைச் சேர்ந்த சந்துரு என்பவரை நான் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். அவர் சினிமாவில் உதவி இயக்குனராகவும், டான்சராகவும் உள்ளார். சினிமா விழா ஒன்றுக்கு என் தந்தையுடன் சென்றபோது தான் சந்துரு அறிமுகமானார். பிறகு நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம். எங்கள் காதல் பற்றி என் தந்தைக்கு தெரிய வந்தது.
முதலில் அவர் எங்கள் காதலை எதிர்க்கவில்லை. படிப்பு முடிந்த பிறகு நீ சந்துருவையே திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். ஆனால் கடந்த 2 மாதங்களாக எங்கள் வீட்டில் என் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என் தந்தையும், அவருக்கு நெருக்கமான திரைத்துறையினரும் சேர்ந்து சந்துருவை மறந்துவிடும்படி என்னை மிரட்டி வருகின்றனர்.
சந்துருவை கொலை செய்ய பல முறை முயற்சி நடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு என் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது என் தந்தை வெள்ளைத் தாளில் என்னிடம் கையெழுத்து வாங்கினார். எங்கள் காதலை பிரித்து சந்துருவை கொன்றுவிடுவதாக அவர் மிரட்டுகிறார்.
என்னை வீட்டில் அடைத்து வைத்திருந்தனர். இன்று காலையில் கல்லூரிக்கு செல்வதாகக் கூறிவிட்டு வந்து சந்துருவின் வீட்டில் தஞ்சம் அடைந்தேன். என் தந்தை எங்கள் காதலை பிரிக்க முயற்சிக்கிறார் என்று சந்துருவின் தாய் மற்றும் அக்காவிடம் கூறினேன். அவர்களுடன் வந்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். என்னை என் காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications