சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும்: அத்வானி கோரிக்கை

சேலத்தில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சேலம் ஜவஹர் திடலில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி தனி விமானம் மூலம் சேலம் வந்தார். இதையடுத்து மரவனேரியில் உள்ள ஆடிட்டர் ரமேஷின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் மகளுக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து ஜவஹர் திடலில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்ட அத்வானி, ரமேஷின் உருவ படத்தை திறந்துவைத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் கூட்டத்தில் அத்வானி பேசியதாவது:
சேலத்துக்கு, இதற்கு முன் இரண்டு முறை வந்துள்ளேன். கடைசியாக, 1998ல், சுதந்திர பொன்விழா ரதயாத்திரை நிகழ்ச்சிக்கு வந்தேன். இப்படி ஒரு மோசமான நிகழ்வுக்காக, சேலம் வருவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆடிட்டர் ரமேஷ் மீது கொண்ட அன்பாலும், அவருடைய சிரித்த முகத்தாலும், அனைத்து மக்களும் இங்கு கூடியிருக்கிறீர்கள். அனைத்து கட்சியினரும், அவருடைய கொலைக்கு, கண்டனம் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
சிறப்பு கவனம் தேவை
ரமேஷ் படுகொலைக்காக, முதல்வர் ஜெயலலிதா, சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது வரவேற்கத்தக்கது என்றாலும், நியமித்ததன் நோக்கம் சரியான முறையில் இருந்திட வேண்டும். உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கி தர வேண்டும்.
இரண்டு சோக சம்பவங்கள்
தமிழகத்தில், சில சம்பவங்களை என்னால் மறக்க முடியாது. அதில் ஒன்று ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதும். 1998ம் ஆண்டு, அப்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவைக்கு வந்தபோது, வெடிகுண்டு வைத்து, 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என, போலீஸார் கூறினர். என்னை பார்க்கவும், பேச்சை கேட்பதற்காக வந்த மக்களை நான் சென்று பார்ப்பேன் என கூறி சென்றேன். அப்போது, என்னை கொல்வதற்காகவே, மனித வெடிகுண்டாக உருவெடுத்து வந்ததாக, அந்த அமைப்பினர் கூறியிருந்தனர். அந்த சம்பவங்களை மறக்க முடியாது.
வெள்ளையப்பன், அரவிந்த்ரெட்டி, ஆடிட்டர் ரமேஷ் இவர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பது மர்மமாக உள்ளது. அவர்களுக்கு என தனிப்பட்ட முறையில் எதிரிகள் கிடையாது. ராஜராஜேஸ்வரி, முருகமணி போன்ற உயிரிழப்பும் வேதனையை அளிக்கிறது. பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் இவ்வாறு அத்வானி பேசினார்.












Click it and Unblock the Notifications