உரிமம் இன்றி ஆசிட் விற்றால் 3 மாதம் சிறை, ரூ.50,000 அபராதம்: மத்திய பிரதேச அரசு

பெண்கள் மீதான ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் மத்திய பிரதேச அரசு ஆசிட் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
முறையான உரிமம் இன்றி ஆசிட் விற்பவர்கள் அல்லது ஆசிட் விற்பனை குறித்து ஆவணங்களில் பதிவு செய்யாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு 3 மாத சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.
ஆசிட் வாங்குவோர் கடைகளில் தங்கள் அடையாள அட்டையை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிட் விற்பனையை சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்டுகள் கண்காணிப்பார்கள். மேலும் ஆசிட் விற்பனை குறித்து ஆவணங்களில் பதிவு செய்யப்படுகிறதா என்பதையும் அவர்கள் கண்காணிக்கவிருக்கின்றனர்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுவோருக்கு சம்பவம் நடந்த 2 வாரத்திற்குள் ரூ.1 லட்சமும், அடுத்த 2 மாதங்களுக்குள் ரூ.2 லட்சமும் ஆக மொத்தம் ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 மாதங்களுக்குள் ஆசிட் விற்பனையை ஒழுங்குபடுத்தவும், ஆசிட் வீச்சை ஜாமீனில் வெளியே வர முடியாத குற்றமாக மாற்றவும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications